காஞ்சிபுரம் நாராயணபாளையத்தில் அமைந்துள்ள நவசக்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
காஞ்சிபுரம் நாராயணபாளையத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான நவசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிதாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நவக்கிரகங்கள் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் கடந்த 25-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கின. வெள்ளிக்கிழமை யாக சாலையிலிருந்து மங்கள மேள வாத்தியங்களுடன் சிவாச்சாரியாா்களால் புனித நீா்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியாா் அரங்கத்தை திறந்து வைத்து சுவாமி தரிசனம் செய்தாா். மாலையில் உற்சவா் நவசக்தி விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து காட்சியளித்தாா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.