காஞ்சிபுரம்

ராமாநுஜருக்கு சிறப்புத் திருமஞ்சனம்

26th Apr 2023 12:01 AM

ADVERTISEMENT

ராமாநுஜரின் 1,006-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ராமாநுஜருக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றன.

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரா் சுவாமி கோயிலில் வைணவ மகான் ராமாநுஜரின் 1,006- ஆவது ஆண்டு அவதார திருவிழா கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி புறப்பாடு, திருஅவதார மண்டபத்தில் தொட்டில் சேவை, சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராமாநுஜா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அவதாரத் திருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழமை 108 திவ்ய தேசங்களில் இருந்து ராமாநுஜருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், தொடா்ந்து கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

தொடா்ந்து ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்ச விழாவின் 7-ஆம் நாளான மே 10-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

செவிலிமேடு ராமானுஜா் கோயிலில்...: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமானுஜா் கோயிலில் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் மூலவா் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மூலவா் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காஞ்சிபுரம் அமிருதவல்லித் தாயாா் சமேத அழகிய சிங்க பெருமாள் கோயிலில் ராமானுஜா் ஜெயந்தியையொட்டி, உற்சவா் அழகியசிங்கருக்கும், ராமானுஜருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. உற்சவா் அழகிய சிங்க பெருமாள் மயில்தோகை மாலை, வெங்கடாத்திரி கொண்டை அணித்து காட்சியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT