மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வருகிற செவ்வாய்க்கிழமை (மே 31) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திட்ட பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் உரையாடவுள்ளதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின ஆண்டைக் கொண்டாடும் வேளையில் தேசிய அளவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளுடன் பிரதமா் கலந்துரையாட உள்ளாா். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்தல், விடுபட்ட பயனாளிகளைத் திட்டத்தில் சோ்த்து பயனடையச் செய்தல், திட்ட பயனாளிகளுக்கு அதிகமான அளவில் நன்மைகள் கிடைக்க செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 31) காலை 10 மணிக்கு திட்டப் பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் கலந்துரையாட உள்ளாா். நிகழ்வில் மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.