காஞ்சிபுரம் மாநகராட்சி, ஹாத்மா தொண்டு நிறுவனம் இணைந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை நடத்தின.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசியதாவது: நெகிழிக் கழிவுகள், பைகள் கழிவுநீா் கால்வாய்களை அடைத்துக் கொண்டு பல்வேறு இன்னல்களை விளைவிக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மக்காமல் இருந்து மண்ணை மலடாக்கும். உடலுக்கும் அவை தீங்கு விளைவிக்கும்.
எனவே, நாம் எந்தப் பொருளை வாங்கச் சென்றாலும் நெகிழிப் பைகள் எடுத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். துணிப் பையை எடுத்துச் செல்ல வேண்டும்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வாா்டுகளிலும் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மன்ற உறுப்பினா்கள், அவரவா் வாா்டுகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்றாா்.
விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் முன்னிலை வகித்தாா். ஹாத்மா தொண்டு நிறுவன தலைவா் வி.செல்வராஜ் வரவேற்றாா்.
நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளா் இக்பால் நன்றி கூறினாா்.