காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் செயல் பட்டு வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 14 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் கைலாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜீவா கலந்துகொண்டு, சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா். இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா், துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். புதிதாக திறந்து வைக்கப்பட்ட இந்த சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினமும் நான்கு பேருக்கு சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.