ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் இல்லாததால் பேருந்து முன்பகுதி மட்டுமே சேதம் அடைந்தது.
சென்னை போரூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்னி பேருந்தின் முன்பக்க டயரிலிருந்து கரும்புகை வெளியிட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையும் படிக்க: மானாமதுரை அருகே கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு
திடீர் புகையை கண்ட ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி தப்பினார். அதற்குள் காற்று திசை காரணமாக தீப்பற்றி பேருந்து முன் பக்கம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
பேருந்து தீப்பிடித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் நிலைய வீரர்கள் உடனடியாக பேருந்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். பேருந்தின் முன் பகுதியில் முற்றிலும் சேதம் அடைந்தது. பேருந்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டது.
பரபரப்பாக காணப்படும் சாலையில் திடீரென தீப்பிடித்து பேருந்து எரிந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பாக இருந்தனர்.