செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ஊராட்சியில் ஸ்ரீ வர சக்திவிநாயகர் கோயில் உள்ளது.
இக்கோயில் வளாகத்தில் புதிதாக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதிகள் நிர்மாணம் செய்ய கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து சன்னதி அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு கோயில் கட்டுமான பணி முடிவடைந்தது. அதையடுத்து கும்பாபிஷேத்திற்கானவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கும்பாபிஷேக விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டை அஷ்டபந்தனம் இடித்து சாத்துதல், அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் , சாந்தி ஹோமம் கும்ப பூர்ணாஹுதி, மங்கள ஆர்த்தி நடைபெற்றது. திங்கள்கிழமை கும்ப ஆராதனம் ,விசேஷ ஹோமங்கள் பூர்ணாஹூதி மகா சாந்தி ஹோமங்கள், மகா தீபாராதனை கலசம் புறப்பாடு நடைபெற்றது.
இதனையடுத்து விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடக்கும் அச்சமயம் மூன்று கருடர்கள் வானில் வட்டமிட்டது. மூன்று கருடர் வானில் வட்டமிட்டதை பக்த கோடிகள் வியப்புடன் கண்டு தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதனையடுத்து மூலவர் வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு கும்பாபிஷேக தீர்த்தம், பிரசாதம் விநியோகம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் , கும்பாபிஷேகம் விழாக்குழுவினர் மற்றும் மகாலட்சுமி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.