காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மருதவார்குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரர் திருக்கோயிலில் ஆனிஉத்திரத் திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள மருதவார்குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரரை வழிபட்டு வெற்றி காண்பதாக பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது இத்திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா கடந்த இரு ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது.
இதையும் படிக்க: நாமக்கலில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு சுவாமியும், அம்மனும் தினசரி வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் எழுந்தருள உள்ளனர். கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு வழக்கறுத்தீசுவரர் சிம்ம வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் ஜூலை 5 ஆம் தேதியும், தேரோட்டம் வரும் ஜூலை 7 ஆம் தேதியும் நடைபெறுகிறது. வரும் 13 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அலுவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.