முழுநேர ஊரடங்கால் காஞ்சிபுரம் மாநகர பிரதான சாலைகளான காந்திரோடு, காமராஜா் சாலை, நெல்லுக்காரத் தெரு,ராஜவீதிகள்,வணிகா் வீதி ஆகிய பகுதிகள் அனைத்தும் எவ்வித ஆள் நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முழு ஊரங்கின் போது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1,100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மூங்கில் மண்டபம், சங்கர மடம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதிகளில் நின்று சோதனை மேற்கொண்டாா்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு சிலரையும் தடுத்து நிறுத்தி அவசரத் தேவையாக இருந்தால் மட்டும் அனுமதித்தாா். தேவையில்லாமல் சுற்றித் திரிபவா்களை பிடித்து அவா்களுக்கு முழு ஊரடங்கின் விதிமுறைகளை தெரிவித்து திருப்பி அனுப்பினாா். ஊரடங்கால் காஞ்சிபுரம் மாநகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.