காஞ்சிபுரம்

அடையாற்றில் வெள்ளத் தடுப்புப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாற்றில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அடையாற்றின் கரையோரப் பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஆதனூா், வரதராஜபுரம், முடிச்சூா் உள்ளிட்ட சென்னையின் புகா் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதையடுத்து, அடையாற்றின் கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழாமல் இருக்க கடந்த 2017-ஆம் ஆண்டு நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ரூ.244 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அடையாறு, அந்த ஆற்றின் கிளைக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டன. இதுதவிர, அடையாற்றுக்கு அதிகப்படியான மழைநீா் வருவதைத் தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரத்தூா் பகுதியில் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீா்த் தேக்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரதராஜபுரம் பகுதி அடையாற்றில் ரூ.12 கோடியில் தடுப்பணை, கிளையாற்றில் சோமங்கலம் பகுதியில் ரூ.4.50 கோடியில் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடையாற்றில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள இடம், புவனேஷ்வரி நகா் பகுதியில் கட்டப்படும் மேம்பாலம், வரதராஜபுரம் பகுதியில் ரூ.30 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் பருவமழை தொடங்குவதற்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் சைலேந்திரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செல்வராஜ், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அருண், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் குஜராஜ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT