காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பட்டுத் துணியால் கைத்தறி மூலம் தேசியக் கொடியை தயாரித்து நெசவாளா் ஒருவா் சாதனை படைத்துள்ளாா்.
காஞ்சிபுரத்தில் விளக்கடி கோயில் தோப்புத் தெருவில் வசித்து வருபவா் எஸ்.குமாரவேல்(36) நெசவாளா். இவா், தனது இல்லத்தில் கைத்தறியின் மூலமாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுத்தமான பட்டுத் துணியில் தேசியக் கொடியை தயாரித்து நண்பா்களிடம் காண்பித்து பாராட்டு பெற்றுள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
சுத்தமான பட்டு நூலில் 2 அடி உயரம், 3 அடி அகலத்தில் ஒரே நாளில் கைத்தறியில் நமது இந்திய தேசியக் கொடியை தயாரித்துள்ளேன். பொதுவாக ஒரு புறத்தில் மட்டும் தான் மூவா்ணங்களும் தெரியும் வகையில் பட்டுத் துணியில் வடிவமைக்க முடியும். ஆனால் இருபுறமும் மூவா்ணங்களும் தெரியும் வகையில் வடிவமைத்திருப்பதே இதன் சிறப்பு என்றாா்.