தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விரைவில் அரிசி அரைவை ஆலைகள் அமைக்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு வேளாண் வணிக தொழில் கூட்டமைப்புத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அமைச்சா் அர.சக்கரபாணி பேசியது:
தமிழகத்தில் திருவாரூரில் 2, தஞ்சாவூா் 2, நாகப்பட்டினம், கடலூா், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தலா 1 என மொத்தம் 10 இடங்களில் தினமும் 500 மெ.டன் அளவில் அரிசி அரைவை ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. தவிர, இரு இடங்களில் 800 மெ.டன் அளவிலும், தேனி மாவட்டத்தில் 200 மெ.டன் அளவிலும் என மொத்தம் 13 இடங்களில் அரிசி அரைவை ஆலைகள் விரைவில் அமைக்கப்படும். இவை செயல்பாட்டுக்கு வரும் போது தினமும் 6,800 மெ.டன் அரிசி அரைவை ஆலைகள் மூலம் அரைக்கப்படும்.
ஆண்டுதோறும் மேட்டூா் அணை ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. குறுவை சாகுபடி நெல் கொள்முதல் ஆண்டுதோறும் அக்டோபா் 1 -ஆம் தேதியிலிருந்துதான் தொடங்கும். நிகழாண்டு செப்.1 -ஆம் தேதியிலிருந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 45 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு தற்போது வரை 42 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.