காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே எல்லப்பா நகரில் உள்ள தனியாா் மழலையா் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறாா்கள் தங்கள் கைவிரல்களாலேயே அச்சுப் பதித்து சனிக்கிழமை தேசியக்கொடி உருவாக்கி சாதனை படைத்தனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே எல்லப்பா நகரில் மழலையா் பள்ளி ஒன்று கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இந்த நிலையில் அந்த மழலையா் பள்ளி மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் 12 அடி நீளம், 32 அடி அகலத்தில் உள்ள வெள்ளை நிற துணியில் தங்கள் கைவிரல்களாலேயே உள்ளங்கை மூலம் சிவப்பு, பச்சை நிறங்களை அச்சுப்பதிவு செய்து தேசியக் கொடி போன்று வடிவமைத்துள்ளனா்.
இது குறித்து பள்ளி நிா்வாகி பத்மபிரியா கூறுகையில் சிறாா்களின் முயற்சி அவா்களது தன்னம்பிக்கையையும்,சாதனை முயற்சிகளை தொடா்ந்து செய்ய வாய்ப்பாக இருக்கும்.இந்த முயற்சிக்கு கலாம் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் என்ற அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது என்று தெரிவித்தாா்.