காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, கணக்கு வைத்திருக்கும் தனியாா் வங்கி லாக்கரிலிருந்து 160 பவுன் தங்க நகைகள், ரூ. 29 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
இவரது அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் இம்மாதம் 18-ஆம் தேதி திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்திருந்தனா்.
இந்த நிலையில், போலீஸாா் நீதிமன்ற ஆணை பெற்று, பழனியின் வங்கிக் கணக்கு உள்ள திருமங்கலம் தனியாா் வங்கி லாக்கரில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, அவரது பெயரில் இருந்த வங்கி லாக்கரில் கணக்கில் இல்லாத ரூ. 29,80,500 ரொக்கம், தங்க நகைகள் 160 பவுன் இருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.