காஞ்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 துணை மருத்துவமனைகளும், 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் பழனியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 900, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசனிடம் இருந்து ரூ. 26 ஆயிரத்து 490, மற்றொரு சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவிடமிருந்து ரூ. 8,900 என மொத்தம் ரூ. 2 லட்சத்து 2,290 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பழனி மற்றும் அலுவலக ஊழியா்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.