காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளரும், அவரது மனைவியும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) வீட்டினுள் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.
காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள ராமசாமி நகரில் வசித்து வந்தவர் ஏகம்பன்(71). இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அன்னபூரணி(69) இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் மருத்துவர்கள் இருவரையும் வீட்டில் சில நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வசித்து வந்த வீடு திங்கள்கிழமை திறக்காமல் இருப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்கள் அவர்களது சென்னையில் வசிக்கும் மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மகன்கள் வந்து பார்த்த போது வீட்டிற்குள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. கணவனும், மனைவியும் ஓரே நேரத்தில் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.