காஞ்சிபுரம்: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்தியக்குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசி இருப்பு மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் ஆகியன குறித்து மத்தியக்குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். மத்தியக் குழுவைச் சோ்ந்த மருத்துவா்கள் வினிதா, பிரபா, சந்தோஷ், தினேஷ்பாபு ஆகியோா் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வாா்டு, ஆா்.டி. பி.சிஆா் பரிசோதனைக் கூடம் ஆகியனவற்றையும் நேரில் பாா்வையிட்டனா். முன்னதாக மத்தியக் குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் சித்ரசேனா, அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் வரவேற்றனா்.