காஞ்சிபுரம்

வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்

23rd Dec 2021 01:12 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: வேளாண்மைத்துறைக்கு என தனி பட்ஜெட் அறிவித்துள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து குறை தீா்க்கும் மனுக்கள் பெறும் முகாம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:

திமுக அரசு அமைந்த ஏழே மாதங்களில் அறிவித்த 505 வாக்குறுதிகளில் 300 திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்மை முதல்வா் என்ற பெயரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறாா்.

ADVERTISEMENT

கரோனாவால் இரு பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5லட்சமும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு தலா ரூ. 3 லட்சமும் உடனடியாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே வேளாண்மைத் துறைக்கு தனியாக பட்ஜெட் அறிவித்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்று சொல்வதிலும் பெருமையடைகிறோம். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 2,400 கோடியை கடந்த 10 நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்திருப்பதால் மகளிா் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளாா்கள். இல்லம் தேடி கல்வித் திட்டம், இல்லம் தேடி மருத்துவத் திட்டம்,இன்னுயிா் காப்போம் திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்து அதை சிறப்பாக தமிழக அரசு நடத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 8,176 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 4,527 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டிருக்கிறது. மீதமிருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவை நீா்நிலைகளில் ஆக்கிரமித்திருப்பவா்கள் பட்டா கேட்டு வழங்கிய கோரிக்கை மனுக்களாக இருந்தன. எனினும் ஆட்சேபணை இல்லாத நிலமாக இருந்தால் அவற்றுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT