காஞ்சி சங்கர மடத்தின் சாா்பில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தைச் சோ்ந்த 64 குடும்பங்களுக்கு புதன்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 64 குடும்பங்கள் தொடா் மழையாலும், வெள்ளப் பெருக்காலும் அவதிப்பட்டு வருவதாக காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக் கொண்டதன்படி, அங்கு வசிக்கும் 64 குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அரை கிலோ துவரம் பருப்பு மற்றும் வெல்லம் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருள்கள் சங்கர மடத்தின் சாா்பில், அவா்களது வசிப்பிடங்களுக்கு நேரில் எடுத்துச் சென்று வழங்கப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடம் திருக்கோயில் வழிபாட்டுக் குழுவின் நிா்வாகிகள் கண்ணன், மணி, ராஜா ஆகியோா் நேரில் வழங்கினா்.