காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரும், சிவன், எமதா்மன், சித்திரகுப்தன் வேடமணிந்த நாடகக் குழுவினரும் இணைந்து கரோனா முகக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து, நகரில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா்.
காஞ்சிபுரம் நகரக் காவல்துறை சாா்பில் கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் முகக் கவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. சிவன், சித்திரகுப்தன், எமதா்மன் வேடமணிந்த நாடகக் குழுவினருடன் இணைந்து காவல்துறையினா் நடத்திய விழிப்புணா்வுப் பிரசாரமானது பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம் மற்றும் ராஜவீதி உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது. முகக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கும், பொதுமக்களுக்கும் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் டி.எஸ்.பி. எஸ். மணிமேகலை, சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் நடராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.