காஞ்சிபுரம் பல்லவன் நகரில் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன ரூ.25 ஆயிரத்தை உரியவரிடம் ஒரு மணி நேரத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு காவல்துறையினர் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் ஜெம்நகரை சேர்ந்தவர் சரவணக்குமார்(28). இவர் பல்லவன் நகர் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்துக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கைப்பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தக் கைப்பையை சரவணக்குமார் எடுத்து அதை உடனடியாக காஞ்சிபுரம் எஸ்.பி.அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளர் சௌந்தர்ராஜனிடம் ஒப்படைத்தார். அவர் கைப்பையை திறந்து பார்த்த போது அதில் ரூ.25 ஆயிரம் பணம், தொலைபேசி எண்ணும் இருந்தது.
உடனடியாக ஆய்வாளர் சௌந்தராஜன் சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி மூலம் பேசி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வருமாறும் அவர் பல்லவன் நகரைச் சேர்ந்த அசோக்குமார் என்பதும் தெரிய வந்தது. பணம் காணாமல் போன ஒரு மணி நேரத்தில் உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி எடுத்த சரவணக்குமாருக்கு தனிப்பிரிவு ஆய்வாளர் சௌந்தர்ராஜன், சார்பு ஆய்வாளர் தமிழ்வாணன், சீத்தாபதி ஆகியோரும் பணத்தைப் பெற்றுக்கொண்ட அசோக்குமாரும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.