கிளாய் ஏரியில் உள்ள ஒரு மதகில் பழுது ஏற்பட்டுள்ளதால் ஏரியில் இருந்து கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி அப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக கிளாய் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவும் அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், ஏரியில் உள்ள மதகு ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழுது ஏற்பட்டதால் கடந்த ஒருவாரமாக ஏரிநீர் பழுதடைந்த மதகின் வழியாக வீணாக வெளியேறி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கிளாய் ஏரியின் கரைகள் மற்றும் மதகுகளை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். ஆனால் இப்பணிகள் முறையாக நடைபெறாததால் தற்போது மதகில் பழுது ஏற்பட்டு ஏரிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் கனமழை பெய்தும் தற்போது ஏரி நிரம்பாமல் உள்ளது. இதனால் ஏரிநீரை பயன்படுத்தி இப்பகுதியில் விவசாயம் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. மதகு பழுதடைந்து ஏரிநீர் வெளியேறுவது குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
எனவே மதகில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி ஏரியில் மழைநீரை தேக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.