கந்தசஷ்டித் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனைகளும் நடந்தன. இதையடுத்து வைரவேலுடன் சண்முகப் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
அதன்பின் கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடந்தது. இரவு, சண்முகப் பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலா்கள் வெள்ளைச்சாமி, குமரன், ஆய்வாளா் சுரேஷ், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
திம்மராஜம்பேட்டையில்....
கந்த சஷ்டி விழாவையொட்டி, திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள ‘வடக்கு ராமேசுவரம்’ எனப்படும் பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயில் வளாகத்துக்குள்ளேயே முருகப் பெருமான் உலா வந்தாா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சூரசம்ஹாரமும், திருக்கல்யாண வைபவமும் நடைபெறவில்லை.