இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யூ) தமிழ் மாநில 14 -ஆவது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் கே.எஸ்.பார்த்தசாரதி நகரில் உள்ள அருணா மஹாலில் வி.வி.கிருஷ்ணமூர்த்தி, எல்.தியாகராஜன் ஆகியோரது நினைவு அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகளை மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தியாகி வி.பி.சிந்தன் நினைவு ஜோதி பயணத்தை உதவிப் பொதுச் செயலர் கே.திருச்செல்வன் தொடங்கி வைத்தார்.
மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் வரவேற்றார். அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் சிறப்புரையாற்றினார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த மு.சண்முகம், ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பைச் சேர்ந்த எம்.எம்.மூர்த்தி, ஹெச்.எம்.எஸ். அமைப்பின் நிர்வாகி இ.சுப்பிரமணி, ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பின் நிர்வாகி இ.அனவர்தன் உள்ளிட்டோர் பேசினர்.
இதனையடுத்து, பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. இதனை மாநிலப் பொதுச் செயலர் கே.ஹேமலதா தொடங்கி வைத்துப் பேசினார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பிரதிநிதிகள் விவாதமும், தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.