காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தினை சுத்தம் செய்யும்போது கண்டெடுக்கப்பட்ட 5 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது குறித்து சார்-ஆட்சியர் எஸ்.சரவணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அண்மையில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பெருமாள், பிரம்மா, விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய 5 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.
இவற்றை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்ததாக கோயில் அதிகாரி ஒருவர் மீது புகார் எழுந்தது. அவற்றைக் கண்டறிந்து மீண்டும் கோயிலில் வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என காஞ்சிபுரம் ராயன்குட்டை மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அ.டில்லிபாபு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் புதன்கிழமை புகார் செய்தார்.
அதன்பேரில் ஆட்சியரின் உத்தரவின்படி சார்-ஆட்சியர் எஸ்.சரவணன் வியாழக்கிழமை மாலை ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.