ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் எனக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்த காவலர் தர்மனின் மகன் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-ஆவது நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-இல் குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தியுடன் மரணமடைந்த காவல் துறையினர் நினைவாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அருகே நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில், உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 30 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது .
இதில், உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குண்டு வெடிப்பில் உயிரிழந்த தர்மன் என்ற காவலரின் மகன் ராஜ்குமார், ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரறிவாளனை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என தெரிவித்தார்.