தேர்தல் ஆணையத்தை சட்ட ரீதியாக கலைக்க வழியுள்ளதா என்று யோசிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் மட்டும் தான் விமர்சனம் செய்து வந்தன. தற்போது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா என்பவர் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
மோடி, அமித்ஷா ஆகியோர் வரம்பு மீறி பேசியதாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
இந்த ஆணையத்தை கலைப்பதற்கு சட்டரீதியாக வழிமுறைகள் இருக்கின்றதா என யோசிக்க வேண்டும்.
22 பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். மே 23-க்குப்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். ஏராளமான பிரச்னைகளை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் அகதிகளைப்போல் திரிகின்றனர்.
அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலையில் தமிழக மாணவர்கள் உள்ளனர். தமிழகத்தில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது.
அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் போதிய பயிற்சி அளிப்பதுடன், தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கின்ற வகையில் விதிமுறைகளை மாற்றவேண்டும் என தமிழக அரசு மத்தியஅரசிடம் வலியுறுத்தவேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மோகன், சி.சங்கர், செங்கல்பட்டு பகுதி செயலர் கே.வேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.சிவகுமார், வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.