ராணுவ வீரர்கள், அஞ்சல் வாக்குகள் கணக்கீடு தொடர்பாக வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் பணியாற்றும் மையங்களில் இருந்து வாக்குப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கான ஆவணங்கள் இணையதளம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலம் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளும், தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அனுப்பிய அஞ்சல் வாக்குகளும் மே 23-இல் எண்ணப்படவுள்ளன.
இதுகுறித்து, வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான பொதுமக்களின் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அதுகுறித்து வாக்கு எண்ணும் அலுவலருக்கு பயிற்சியளித்து, ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் ராஜேந்திரன், குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணன், அமீதுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.