செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களைக் கண்டித்து 108 அவசர ஊர்தி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இருந்து நோயாளிகளைக் கொண்டு செல்லும் பணியில் 108 அவசர ஊர்தி மற்றும் தனியார் அவசர ஊர்தி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் விவகாரத்தில் இந்த அவசர ஊர்தி உரிமையாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதனிடையே, சென்னைக்கு ஒரு நோயாளியைக் கொண்டு செல்வதில் 108 அவசர ஊர்தி ஊழியர் விஜிப்பிரியா என்ற பெண் ஊழியருக்கும், தனியார் அவசர ஊர்தி உரிமையாளர் பாலு என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பாலு, பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த மற்ற 108 அவசர ஊர்தி ஊழியர்கள் தனியார் அவசர ஊர்தி உரிமையாளரைக் கண்டித்து திங்கள்கிழமை மாலையில் வேலைநிறுத்தத்திலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் செல்ல முடியாமலும் வெளியே வர முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸார் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அவசர ஊர்தி ஊழியர் பாலு தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்தார். இதையடுத்து அவசர ஊர்தி ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை திங்கள்கிழமை இரவே கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் தனியார் அவசர ஊர்தி உரிமையாளர்களை இனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி 108 அவசர ஊர்தி ஊழியர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.