மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 13-ஆவது வார்டான கடப்பேரி பகுதியில் கழிவு நீர் தேங்கியிருப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள கழிவுநீர்க் கால்வாயை தூர்வாரி, கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்குமாறு மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அவற்றில் 13-ஆவது வார்டான கடப்பேரியில், இளங்கோ தெரு உள்ளது. மழைக் காலங்களில் மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரும், செங்குந்தர்பேட்டை, மசூதி தெரு, மீனாட்சியம்மன் கோயில் தெரு, ஆனந்தா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் பார்த்தசாரதி தெரு பெரிய கால்வாய் வழியாக கடப்பேரி, காந்தி நகர் வழியாக வெளியேறுகிறது. ஒரு சில இடங்களில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக பெரிய கால்வாய் சுருங்கி கடப்பேரி பகுதிக்கு கழிவுநீர் வந்தடைகிறது.
இப்பகுதியில் உள்ள கால்வாயைத் தூர் வாராததால், கழிவுநீர் செல்ல முடியாமல் அப்பகுதியிலேயே குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கழிவுநீர்க் கால்வாயைத் தூர்வாரி, நீர் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மதுராந்தகம் நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் மாநிலத் தலைவர் ஜி.முனுசாமி, மாநில வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.மதியழகன் ஆகியோர் மதுராந்தகம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.