மாமல்லபுரத்தில் புதன்கிழமை கடல் உள்வாங்கியதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்காமல் அச்சத்துடன் திரும்பிச் சென்றனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரம் நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்களான ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைப்பாறை கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக கடலுக்குச் சென்று குளித்து மகிழ்வர். அமாவாசை, பெளர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துக் காணப்படும். அந்த நாள்களில் மாமல்லபுரம் போலீஸாரும், கடலோரக் காவல் படையினர்ரும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிப்பர்.
இந்நிலையில், புதன்கிழமை பெளர்ணமியன்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டது. மாலையில், கடல் அலையின் சீற்றம் குறைந்து, கடல் உள்வாங்கியது. இதனால், மீண்டும் எப்போது கடல் சீற்றம் அதிகரிக்குமோ என அஞ்சிய சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேறினர். அதே சமயம் கடல் உள்வாங்கியதை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.