ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரூ.6.69 கோடியில் ராமாநுஜருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார சுவாமி கோயிலில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக காட்சியளிக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ராமாநுஜரின் 1,000-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பாக, ராமாநுஜருக்கு மணிமண்டபம் மற்றும் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வரைபடத்துக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், மணிமண்டபம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கும் பணியின் திட்ட மதிப்பீடு ரூ.6 கோடியில் இருந்து ரூ 6.69 கோடியாக உயர்த்தப்பட்டு, அரசு சார்பாக டெண்டர் விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராமாநுஜருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. மணிமண்டபம் அமைய உள்ள இடத்தை அளவீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கட்டுமானத் தொழிலாளர்களுக்காக தங்கும் கொட்டகைகள் அமைக்கும் பணியில் தற்போது தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.