காஞ்சிபுரத்திலிருந்து வரும் ரயில்களை நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் அதிருப்தி அடைந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத், செங்கல்பட்டு வழியாக தாம்பரம், சென்னை கடற்கரைப் பகுதிக்கு தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்துக்கும் நாள்தோறும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதனிடையே, அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு 8 புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான பக்தர்கள் நாள்தோறும் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். வழக்கமாக தொழில், வேலை நிமித்தம் சென்று வரும் பயணிகளும் இதே வழித்தடங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் ரயில்கள் வாலாஜாபாத், பாலூர் ரயில் நிலையங்களில் 2 மணிநேரம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, சுமையேற்றிச் செல்லும் ரயில்களை வழக்கமாக இயக்கப்படும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே அலுவலர்கள் இயக்க உத்தரவிடுகின்றனர். இதனால், நாள்தோறும் சென்று வரும் ரயில்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை இரவு காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கடற்கரைக்குப் புறப்பட்ட ரயில் வழக்கமாக பாலூர் ரயில் நிலையத்தில் வெகு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த பயணிகள் ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கு தடையின்றி நாள்தோறும் இயக்கப்படும் வழித்தடத்தில் ரயிலை இயக்க வேண்டும் என அவர்கள் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.