மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. மூலவர் ராகவேந்திரர் சந்நிதியிலும், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பீடாதிபதி ரகோத்தம சுவாமி மேளதாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பின்னர் பிருந்தாவன வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்த ராகவேந்திரர், ஆஞ்சநேயர், சத்யநாராயணர் சிலைகளுக்கு அவர் பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.