ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகை உடனுறை ஸ்ரீசித்தானந்தேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்பிகை உடனுறை ஸ்ரீசித்தானந்தேஸ்வரர் மற்றும் கிராம தேவதை கங்கை அம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன.
மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயில்களை பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து திருப்பணி செய்து புதுப்பித்தனர். இதையடுத்து இரண்டு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை கணபதி பூஜை, மாலை முதலாம் யாக சாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், உற்சவர்கள் திருவீதி உலாவும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை திருக்கழுகுன்றம் திருவாசகசித்தர் தாமோதரன் தலைமையில் நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, கோபுர கலசங்களில் புனித நீர் வார்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சேத்துப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.