காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காமராஜரின் 117-ஆவது பிறந்தநாள் விழா காரைத்திட்டு தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


காமராஜரின் 117-ஆவது பிறந்தநாள் விழா காரைத்திட்டு தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
 விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பவானி தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிங் உசேன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சி.ஆர்.பெருமாள், சபாபதி, நிஜாம், பொன்.மனோகரன், இதயதுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.  முன்னதாக காமராஜரின்  உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . 
மாணவ, மாணவியரிடையே காமராஜர் குறித்து பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. 
 இதே போன்று செங்கல்பட்டில் நடந்த விழாவில், காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.  நகர தலைவர் ஜெ.பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் டி.ஜெயராமன், ரியாஸ்பாய், முருகன், உமாபதி, கனகராஜ், அதிரசம் ரங்கநாதன், நூர்பாஷா, மாவட்டச் செயலர் ராமச்சந்திரன்  உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்று செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மணிக்கூண்டு பகுதியில், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில், அக்கட்சியினர் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் இந்து கார்னேஷன் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினம், கல்வி வளர்ச்சி நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளியின் செயலர் எஸ்.சேகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை என்.அமுதா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழு உறுப்பினர்கள் துரை பிருத்விராஜ், பி.மேகராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை பிரியா நன்றி கூறினார்.
திருவள்ளூரில்...
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
  திருவள்ளூர் அருகே வெண்மனம்புதூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தமிழ் ஆசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில், கணித ஆசிரியர் நாகலிங்கம் பங்கேற்று, காமராஜர் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து, ஓவியம், விளையாட்டு, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 
 இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆசிரியை சாந்தி, நாடார் சங்க நிர்வாகிகள் காயல்மொழி கணேசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் பாண்டியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஆசிரியை ஆனந்தி ராஜம் நன்றி கூறினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில்...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி சார்பில், திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு, திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணியின் தலைவர் அருள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கினர்.
 நிகழ்ச்சியில், வழக்குரைஞர் பிரிவு மாநில பொதுச்செயலர் ஹேமகுமார், நிர்வாகிகள் ஜீவராவ், வீரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருத்தணியில்...
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
 திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சேஷாசலம் வரவேற்றார்.
விழாவில், மாணவிகளிடையே கவிதை, பாடல், ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.காமராஜர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் வினோத்குமார், செயலர் ஏ.பி.ஆர்.செல்வராஜ், பொருளாளர் வி.முருகன், நிர்வாகிகள் சிவசுப்பிரமணிம், ஏ.சி.ஆர்.பாலாஜி, சேகர், அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
 திருத்தணி ஒன்றியம், வி.கே.ஆர்.புரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு, தலைமை ஆசிரியை பூங்கோதை தலைமை வகித்தார். பட்டதாரி கணித ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் மாணவ-மாணவியர் இடையே பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக அதே கிராமத்தைச் சேர்ந்த வீரராகவலு மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளிக்கு ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினர்.
பொன்னேரியில்...
பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு, பொன்னேரி நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் பிரகாசம், மாவட்டச் செயலர் கோவர்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம், அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப் படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இதையடுத்து, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரவி, காத்தவராயன், ஜெயராஜ், குணசேகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில்...
ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவர்களிடையே பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. நடுவராக பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் அமுதா, பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com