அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக கோயிலுக்குள் 4 இடங்களிலும், வெளிப்பகுதியில் 4 இடங்களிலும் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளனர்.
நாள்தோறும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களில் முதியோர் சராசரியாக 25 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம், கால்வலி, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவர்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், உடல் பாதிப்பு அதிகம் இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் கூறியது: அத்திவரதர் பெருவிழாவையொட்டி, நிலையான 10 மருத்துவ முகாம்கள், 20 நடமாடும் சிகிச்சை வாகனங்கள், அவசர ஊர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு முகாம்களிலும் தலா 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுவரை தலை சுற்றல் காரணமாக 3,025 பேர், உயர்ரத்த அழுத்தத்துக்கு 1,764 பேர், சர்க்கரை நோய் பாதிப்புக்கு 1,008 பேர், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 5,796 , காய்ச்சலுக்கு 252, வாந்தி 378, கை-கால் வலி 36, அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ததில் 241 பேர் என மொத்தம் 12,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், உடலில் நீர்ச்சத்தினை இழக்கும் நபர்களுக்கென ஒவ்வொரு முகாமிலும் உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 42 ஆயிரத்து 800 பேருக்கு உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று நோய் பரவாதிருக்கும் வகையில் ஆய்வு செய்ய டெங்கு தடுப்புக் களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுகாதாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.