திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மகத்தையொட்டி சரவணப் பொதிகை தெப்போற்சவம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சரவணப் பொதிகை தெப்போற்சவத்தையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தெப்பம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சரவணப் பொதிகை குளத்தில் தெப்பத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, உற்சவருக்கு தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் அறங்காவலர்கள் சக்திவேல், வெற்றிவேல் ஆகியோர் உற்சவ ஏற்பாடுகளை செய்திருந்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.