சென்னை அருகே குழந்தையை கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி வெங்கடேசன் (43). வேலை இல்லாமல் இருந்த இவரை சென்னை காயரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள் கட்டுமான வேலையில் சேர்த்துவிட்டுள்ளார்.
அதனால் வெங்கடேசன் கூலியில் இருந்து ஒரு பகுதியை பச்சையம்மாளிடம் கமிஷனாக கொடுத்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 14.12.2010 -இல் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயமாக வெங்கடேசனுக்கும் பச்சையம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் வெங்கடேசன் பச்சையம்மாளை கத்தியால் குத்த முயன்றார். அப்போது பச்சையம்மாளின் இரண்டரை வயது பேரன் வடிவேல்முருகனின் மீது கத்தி குத்தியதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதனையடுத்து சென்னை கண்ணகிநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் வெங்கடேசன் ஜாமீனில் வெளி வந்துவிட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குழந்தையை கொலை செய்த வெங்கடேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.