குழந்தை உரிமைகள் பாதுகாப்புக் குழு சார்பில் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை என்.சுதா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சிலம்பரசன், சுரேஷ்குமார், ஐயப்பன், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பின் அவசியம், மரம் வளர்த்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை குறித்து குழந்தைத் தொழிலாளர் அகற்றும் முறை திட்ட முதன்மை மேலாளர் மோகனவேல், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திட்ட துணை மேலாளர் சுரேஷ் குமார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், குணசேகரன் ஆகியோர் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கினர். கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
முன்னதாக உதவித் தலைமை ஆசிரியை பொய்யாமொழி வரவேற்றார். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.