முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ததைக் கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஜே.பாஸ்கர் வரவேற்றார். நிர்வாகிகள் டி.ஜெயராமன், ஆர்.குமரவேல், ரியாஸ்பாய், முருகன், பவளவண்ணன், உமாபதி, இளைஞரணி தலைவர் பாலா விக்னேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான காங்கிரஸார் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர் .
போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதவரத்தில்...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மாதவரத்தில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் மகீந்திரன் தலைமை வகித்தார். மாதவரம் நகரத் தலைவர் என்.வெங்கடேசன், குபேந்திரன், சாந்தகுமார், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.