செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் மர்ம கும்பலால் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
சிங்கப்பெருமாள் கோயில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சுந்தர் மகன் சூர்யா (20). எலக்ட்ரீஷியன். இவர் தனது இருசக்கரவாகனத்தில் வியாழக்கிழமை இரவு பாடலாத்திரி நரசிம்மன் கோயில் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட மர்மகும்பல் சூர்யாவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர். சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்தவர்கள் மறைமலைநகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், சூர்யா மீது கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளும், மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.