ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் ஒன்று புதன்கிழமை மாலை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே நின்றுள்ளது. அதில் வந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, காரில் இருந்த இளைஞர் ஒருவர் இறங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரைத் துரத்திய ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
பட்டப் பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர், சென்னை மடிப்பாக்கம், கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர்லால் (32) என்பதும், இவர் மீது மடிப்பாக்கம் மற்றும் புழல் காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.