காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடந்த அத்திவரதர் பெருவிழாவில் போலி அனுமதிச் சீட்டு விற்றதாக 11 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆக. 17-ஆம் தேதி வரை 48 நாள்கள் நடைபெற்று, நிறைவுற்றது. விழாவில், அத்திவரதரை தரிசிக்க வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி. ஆகியோர்களுக்கு தனித் தனி அனுமதிச் சீட்டுகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியிருந்தது.
இதை போலியாக அச்சடித்து வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் செந்தில், ரமேஷ், அப்துல்காதர், பாலு,நவுசாத், அசோக், கலிவரதன் உள்ளிட்ட 7 பேர், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தனசேகரன், பிலால், மற்றொரு பிலால், ஜரூத்தீன் உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.