மாமல்லபுரம், அண்ணாநகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நவகாளியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நவகாளியம்மன் கோயிலில் ஆடி மாதம் கூழ்வார்த்தல் திருவிழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை ஜலம் திரட்டி, கரக அலங்காரம் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பால் குட ஊர்வலம் மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
காப்புக்கட்டி விரதமிருந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்து, கருக்காத்தம்மன் கோயில், பஜனை கோயில் தெரு, கங்கைகொண்டான் மண்டபம், தலசயனப் பெருமாள்கோயில் வழியாக ஐந்துரதம் அருகில் உள்ள நவகாளியம்மன் கோயிலைச் சென்றடைந்தனர்.
இதையடுத்து நவகாளியம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.