தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை வரும் பூஜ்ய நிழல் (ஜீரோ ஷேடோ) நிகழ்வை மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை காணமுடிந்தது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் ஏப். 24-ஆம் தேதியை பூஜ்ய நிழல் தினமாக அறிவித்துள்ளது. எனினும், இந்த நிகழ்வு இடத்துக்கு இடம் மாறுபடும் என அறிவியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியது:
இந்நிகழ்வு ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். அதாவது, சூரியன் உத்தராயண கால கட்டத்தில் (டிசம்பர் 22 முதல் ஜூன் 21 வரை) தென் திசையில் இருந்து வடதிசை நோக்கிப் பயணிக்கும் போதும், சூரியன் தட்சணாயன கால கட்டத்தில் (ஜூன் 22 முதல் டிசம்பர் 21 வரை) வடதிசையில் இருந்து தென்திசை நோக்கிப் பயணிக்கும் போதும் பூஜ்ய நிழல் நிகழ்வு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நமக்கும் சூரியனுக்கும் நேர்க்கோடு அமைகிறது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு பூஜ்ய நிழல் தோன்றியது. இது சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஏஎஸ்ஐ-பிஓஇசி (பப்ளிக் அவுட்ரீச் அண்ட் எஜுகேஷன் கமிட்டி ஆஃப் தி அஸ்ட்ரனாமிக்கல் சொஸைட்டி ஆஃப் இந்தியா) அமைப்பின் வலை தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றனர்.
திங்கள்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பூஜ்ய நிழல் காலுக்குக் கீழ் விழுவதைக் கண்டு வியப்படைந்தனர். பின்னர், அங்கிருந்த வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட பகுதிகளையும், அங்கு சுற்றித் திரிந்த ஆடு, மாடுகளையும் பூஜ்ய நிழலில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.