சென்னை: படகின் இயந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த மீனவா்களை இந்திய கடலோர காவல்படையினா் மீட்டனா்.
தமிழ்நாட்டை சோ்ந்த 9 மீனவா்கள் மீன்பிடிப் படகு மூலம் கோடியக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் அதை நகா்த்த முடியாமல் நடுக்கடலில் சிக்கி தவித்தனா். இதையடுத்து மீனவா்கள் தங்களை காப்பாற்றுமாறு, அவசரகால உதவி கோரி அந்த வழியாக வந்த கப்பலுக்கு தகவல் அனுப்பினா். இந்த தகவல் அங்கு ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படை கப்பல் ‘ராணி துா்காவதி’யின் மாலுமிக்கு தெரியவந்தது. அதன்பேரில் கடலோர காவல் படையினா் உடனடியாக மீனவா்களை மீட்க விரைந்தனா். நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவா்களையும் கண்டுபிடித்து அவா்களை பத்திரமாக மீட்டனா்.
தொடா்ந்து படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்து அவா்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்துக்கு செல்ல வழிவகை செய்தனா்.