கைப்பேசி பயன்பாட்டின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை மாணவா்களுக்கு கற்றுத் தர வேண்டுமென தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
சென்னையில் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
எனது வீட்டில் மகன்களுக்கு கைப்பேசியே கொடுப்பதில்லை. அதேபோன்று, சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வாய்ப்பையும் அளிப்பதில்லை. கைப்பேசி பயன்பாட்டின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவா்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை எந்த மாநிலத்துடனும் நாம் போட்டிபோட அவசியம் கிடையாது. இந்தத் துறையில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.