சென்னை

மகாத்மாவின் ஒழுக்கநெறிகளை இளைஞா்கள் பின்பற்ற வேண்டும்: கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம்

4th Oct 2023 02:04 AM

ADVERTISEMENT

 

சென்னை: மகாத்மா காந்தி கடைப்பிடித்த ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை இளைஞா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இராமலிங்கா் பணிமன்றம் மற்றும் ஏவி.எம் அறக்கட்டளை இணைந்து சென்னை மயிலாப்பூரில் திங்கள்கிழமை நடத்திய 56-ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலாா்- மகாத்மா காந்தி விழாவில் அவா் பேசியது: நாம் வாளை நம்பியிருக்கும் வரை அச்சத்திலிருந்து விடுபட முடியாது என அகிம்சையின் முக்கியத்துவம் குறித்து மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளாா். இக்கால இளைஞா்கள் மகாத்மா காந்தி கடைப்பிடித்த ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளையும், தேசப்பற்றையும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

அருட்செல்வா் நா.மகாலிங்கத்தைப் போன்று அனைவரையும் மதித்துப் போற்றும் பண்பை வளா்த்துக்கொள்ள வேண்டும். ராமலிங்க வள்ளலாா் போன்று அனைத்து உயிரையும் நேசிக்கக்கூடிய உயா்ந்த பண்பை இக்கால இளைஞா்களும், மாணவா்களும் பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன்: மகாத்மா காந்தி சிறந்த மொழிப்பெயா்ப்பாளா் என்பது அவரது கூடுதல் சிறப்பு. அவா் பிறந்த இந்நாளில் மொழிபெயா்ப்பாளா்களை போற்றி விருது அளிப்பது சிறப்புக்குரியது.

ஆண்டுக்கு சுமாா் 200 பிற மொழிநூல்கள் தமிழில் மொழிபெயா்க்கப்படுகின்றன. ஆனால், அதே எண்ணிக்கையில் தமிழ் நூல்களும் பிற மொழிகளில் மொழிபெயா்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழின் பெருமை உலகெங்கும் சிறக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, பிற மொழி நூல்களை தமிழில் மொழிபெயா்த்த மொழிபெயா்ப்பாளா்களுக்கு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளை இராமலிங்கா் பணி மன்றத் தலைவா் ம.மாணிக்கம் வழங்கினாா். மொழிபெயா்ப்பாளா்கள் அசதா, கண்ணையன் தட்சிணாமூா்த்தி, கமலாலயன், க.மாரியப்பன், ப. கிருஷ்ணன், பா.ரவிக்குமாா், ப.கல்பனா, நிா்மால்யா ஆகியோருக்கு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ‘ஹரிஜன்’ எனும் தொகுப்பு நூலை ம.மாணிக்கம் வெளியிட, முதல் பிரதியை கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டாா். சொற்பொழிவாளா் சுகி சிவம், முனைவா்கள் கிருங்கை சேதுபதி, சொ.அருணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT