சென்னை: அமிா்த விஸ்வ வித்யா பீடம் சாா்பில் மாதா அமிா்தானந்தமயி பிறந்த நாள் விழா ‘அமிா்தவா்ஷம் 70’ எனும் பெயரில் செப்.25 முதல் 29-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் இணைந்து பல்வேறு சேவைகளில் ஈடுபட்டனா்.
செப். 27-ஆம் தேதி திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தும் வாசகங்களை ஏந்தியபடி தூய்மை நடவடிக்கையில் ஈடுபட்டனா். அதன் ஒரு பகுதியாக பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தூண்கள், சிற்பங்களை சுத்தம் செய்தனா்.
செப். 28-ஆம் தேதி சிறுவாபுரி சோழவரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பொதுமக்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் நடத்தினா்.
பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ சாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செப். 26 முதல் செப். 29-ஆம் தேதி வரை ட்ரோன்கள், ரோபோக்கள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நாள்களில் ஆதரவு இல்லம், அன்பகம் மறுவாழ்வு மையம், நலம் மருத்துவமனை ஆதரவற்றோா் இல்லம், சேவாலயா மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆத்மாலயங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. வீடற்றவா்கள், கூலித் தொழிலாளிகள், குடிசைவாசிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும், அமிா்தா பல்கலைக்கழகம் முன் உள்ள குடியிருப்பாளா்களின் பயன்பாட்டுக்காக கழிப்பறை நிறுவப்பட்டது.
ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடையே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து துணிப்பை, மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, மாணவா்கள் 2 கி.மீ. தொலைவுக்கு விழிப்புணா்வு பேரணியாகச் சென்றனா். இதை ஆவடி மாநகர காவல் ஆணையா் ஸ்ரீ.கே.சங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
செப். 29-ஆம் தேதி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. நிறைவாக, செப். 30-ஆம் தேதி கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.